Tuesday 18 December 2012

பாலாவின் கடவுள்

அனைத்து பற்றுக்களையும் துறந்துவிட்டு வாழ்வின் இறுதியை நெருங்கிய அநேகமக்கள் கூடும் இடமான காசியில் இருந்துவரும் பலபிரிவு சாமியார்களையும், அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியுமே கூறுகிறது படத்தின் துவக்கம்.இறுக்கமான சிந்தனையை காட்டும் முயற்சியில்,யாருமே நுழையத்தவறிய,தயங்கிய தளத்தில் பயணித்த பாலா,ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை எழுத்திலிருந்து திரைக்கு மாற்றியுள்ளார். ஏழாம் உலகம் கடவுளைப்பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையாததால்,அதனைக் கொண்டுசேர்க்கும் முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாலாவின் இந்தப்படம்.வாழ்வின் மிச்சத்தைக் கழிக்க அநேகமக்கள் தேர்ந்தெடுக்கும் இடமான காசியில்,சாமியார்களாக இருப்பவர்களின் அடிப்படைத்தேவைகள் எளிதில் பூர்த்தியடைவதால், மிகுதியான சாமியார்களின் களமாக காசி இருந்துவருகிறது என்பதுடன் துவங்கும் இப்படத்தில்,மூத்த சாமியார் ஒருவரால்,”மேரே ப்ரம்மா,மேரே ஈஸ்வர்,அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உருவாக்கப்படுகிறார் கதாநாயகன். துஷ்டர்களை இனம் காணும் தன்மையும்,அழிக்கும் மனோதிடமும் உள்ளவனாக சித்தரிக்கப்பட்டுள்ள கதையின் நாயகன்,அதே மனநிலையுடன் (சொந்த)ஊருக்கு வருகிறான்.வாழ்வின் உச்சநிலையைக் கழிக்கவரும் மனிதர்களை மட்டுமே சந்தித்த அவன், வாழ்க்கையின் போக்கில் இருக்கும் மனிதர்களை சந்திக்கிறான்.இருந்தாலும் பழக்கப்பட்ட எண்ணத்தை மாற்றமுடியுமா என்ன?.அவன்தான் முக்திதேடும் மனிதர்களாலும்,நீதான் கடவுள் என்று கூறுபவர்களாலும் உருவாக்கப்பட்டவன் ஆயிற்றே.அதனால்தான் களம் வேறுபட்ட போதிலும் அவனின் மனநிலை அப்படியே இருக்கிறது.ஆகவே அவன் அம்மாவிடம் பேசும்போது,”ஐயிரண்டு திங்களாய்.....” என்ற பாடலை சொல்லுவதோடு,அந்தப் பெண்மணியிடம்,”தூமைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்கிறான்.வசனகர்த்தா அந்தக்கேள்வியை அவளிடம் கேட்கிறாரா? அல்லது பார்வையாளர்களிடம் கேட்கிறாரா? என்பதே ஒரு கேள்வி. பிச்சையை மட்டுமே அறிந்தவர்களையும்,அடித்து துன்புறுத்தப்பட்டு பிச்சைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும்,வியாபாரப்பொருட்களாக முதலீடு செய்து,விலைக்கு வாங்கி பிச்சைக்கு பயன்படுத்தப்படுபவர்களையும் காட்டும்போது இயக்குநரின் தந்திரம்,இளகிய மனதினரின் கழிவிரக்கத்தை காசாக்க முயற்சி செய்கிறது.இதில் மனதிற்கு இதமாக(?) அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிவேறு.அப்போதுதானே தட்டில் அதிக காசு விழும். இதுபோன்ற மூர்க்க சிந்தனைகளையெல்லாம்,வலிமையான சினிமாவாக காட்டுவது என்பது பாலாவிற்கே உரித்தான பாணி.தமிழில் ஓர் உலகசினிமா என்று பறைசாற்றினாலும், குத்துப்பாட்டு என்ற முக்கிய அம்சம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த இயக்குநர்,இதில் அந்தக்குறை தெரியாமல் இருக்க,எம்.ஜி.ஆர்,சிவாஜி,சிம்பு பாடல்களைக்காட்டி தீவிரத்தை உணர்த்துகிறார். பின்னர்தான் கடவுளை பற்றிய விளக்கங்களை பாலா மற்றும் ஜெயமோகன் கூட்டணி விளக்கத்தொடங்குகிறது.தமிழ்சினிமாவில் இதுவரை எந்தப்படத்திலும், எந்த ஹீரோவும் கெட்டவர்களை அழித்ததில்லை(?).ஆனால் இதில் மட்டுமே பாலாவின் கடவுள் கெட்டவர்களை அழிக்கிறார்.இவர் மட்டுமே தன்னைக் கடவுள் என்று அறிவிக்கிறார்.ஏனெனில் பாலாவின் கடவுள் மட்டுமே,தான் நுகரும் பொருட்களில் அதிகமாக கஞ்சாவும்,வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளில் கொஞ்சம் சமஸ்கிருதமும் பயன்படுத்துகிறார். எல்லாரும் வணங்கும் சாமிக்கு கையில்லை,காலில்லை,வாய் பேசாது, கண் பார்க்காது,காது கேட்காது என்று உருவகப்படுத்திய இயக்குநர்,கடவுளின் கிருபையால் சாமி உயிருடன் இருப்பதுபோல காட்டிவிட்டார்.கதைக்கு தேவையோ என்னவோ சாமி சிலநேரம் பார்க்கவும் செய்கிறார்,பேசியும் விடுகிறார்.கடவுளின் இருப்பைக்காட்டி ஒருபுறம் சினிமா எடுத்து பணம் சம்பாதிக்கும்போது,கடவுளின் செயல்பாடு இல்லாநிலையைக்காட்டி (மௌனம் என்றுகூட சொல்லமுடியாது) பணம் சம்பாதிப்பதையும் குறைசொல்ல முடியாது. அதுதானே ஜனநாயகம்.அதிலும்,”அட நீ என்ன முருகா! வர வர பிச்சக்காரங்யகிட்டயே பிச்ச கேக்க ஆரம்பிச்சுட்ட” என்ற வசனம் சொல்லி,பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் போது அதுவும் ஜனநாயகம். தான் பிச்சையெடுப்பதை குறையென்று உணரமுடியாத அளவிற்கு பழக்கப்பட்ட சிறுவனின் நக்கல் பேச்சின் வாயிலாக ஜெயமோகன்,”முருகா..நீ பாட்டுக்கு கோவிச்சுக்கிட்டு மலைக்கு மலை தாவிட்டு போயிட்ட..நாங்கல்ல பிச்சையெடுக்க கஷ்டப்படுறோம்” எனும்போது பணம் சம்பாதிக்க அவர் கையாளும் யுக்தி புரிகிறது.மேலும், “ஏய் மொட்டை..அன்னக்காவடி..பிச்சை போடுறா” “அன்ன லச்சுமி..ஆதி லச்சுமி... மகாலச்சுமி... அடியே ஜோதிலச்சுமி.காது கேக்காதது மாதிரி போறவ”.இந்த வசனத்திற்காகவே எல்லா லட்சுமிகளும் திரு.ஜெயமோகனின் வாசல்கதவைத் தட்டுவார்கள். இப்படித்தான் போகின்றன காமெடி என்ற பெயரால் காட்சிகள்.அதிலும் அந்த அரவாணி சாமியிடம்,”சாமி இத்தன வருசமா உன்ன மட்டும்தான சாமின்னு சொல்லிக்கிட்டு (நம்பவில்லை) இருக்கோம்.நல்ல வழிகாட்டு சாமி..இதுக்கும் மேல பேசாம இருந்து இவ சீரழிஞ்சு போனா நீ நாசமா நரக்கழிஞ்சு போவ” என்று சாபம் விடுகிறா(ள்)(ன்). கதையின் போக்கை சுவாரஸியமாக நகர்த்த ஏதோ போனால் போகட்டும் என்று சாமிய பேச வைத்துவிடுகிறார் பாலா.ஈனப்பிறவிகளின் குரலாக,”பாத்துப் புழுத்துறான்..தேவடியா மகன்” என்பது போன்ற சிறந்த வசனங்கள் ஜெயமோகனை ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.கதைக்கு தேவையான மிக இயல்பான வசனங்கள் இவை. பிச்சைக்காரர்களின் கூட்டத்தலைவனின் முகவராக வரும் முருகன் கதாபாத்திரம்,எந்த வகையான மனநிலை கொண்டவன்?சுயநலத்திற்கு கடத்திவந்து,நானும் உன்னைப்போல பிச்சைக்காரிக்கு பொறந்தவந்தான் தங்கச்சி என்று சென்டிமென்டாய் பேசி பிச்சையெடுக்க வைப்பான்.சாராயம் குடித்துவிட்டு வந்து,பிச்சைக்காரர்களுக்கும் சாராயம் வாங்கிக்கொடுத்து,சந்தோசமா இருங்க,வாழ்க்கையில் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறுவான். அவன் தான் பிச்சைக்காரர்களின் கடவுளா பாலா சார்?.போதை அதிகமான பிறகு,பணத்தை அள்ளிவீசி,இதெல்லாம் நீங்க எனக்குப்போட்ட பிச்சை என்று வசனம் பேசுவான்.அவனுடைய பிச்சைக்காரர்கள் அவனுக்கு மட்டுமே சொந்தம்,வேறு யாரும் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சுயநலத்தால் கையாளும் யுக்திகள்தானா இவை. ஒருவேளை கதாநாயகியை காப்பாற்ற நினைக்கிறானா? அல்லது அவள் வாழ்வை சீரழிவில் இருந்து காக்கவா?.இதில் அவ்வப்போது ஆறுதல் வேறு.நல்லவேளை படத்தில் சாமிவேஷம் போட்ட எந்தப்பிச்சைக்காரனையும் யாரும் தூக்கிப்போகவில்லை.இல்லையெனில் வசனகர்த்தாவிற்கு அல்வா சாப்பிடுவது போல வசனம் எளிதாக உதித்திருக்கும். படத்தில் காதாபாத்திரங்களாக நடித்தவர்களின் உழைப்பு நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.கூடவே அவர்களின் எதிர்காலமும்(இனி பூஜாவை கனவிலும் நினைக்க மாட்டார்கள்).இசையென்ற அமைப்பு மட்டும் இல்லாதிருந்தால்,சம்பந்தமில்லாத இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் மனதைப் போல இருந்திருக்கும்.வழக்கம்போல மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.இசைப்பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்.அதிலும் ரமணமாலையில் இருந்து எடுத்து வழங்கியிருக்கிற,”பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்” பாடல் கனிய வைக்கிறது.ஏனோ துரதிர்ஷ்டம் காட்சியமைப்புகள் ஒத்துவரவில்லை.ராஜாசார் தயவுசெய்து இந்தப்பாடல்களை இதுபோன்ற சினிமாவிற்கு எடுத்தாளாமல் இருப்பது நன்று. முடிவில் படத்தில் ஈனப்பிறவியாக வரும் கதாநாயகியின் வாயிலாக, “நான் என்ன பாவம் செய்தேன்?என்னை ஏன் ரட்சிக்கவில்லை?” “எல்லா புகழும் இறைவனுக்கே..என்னைப் போன்றவர்களை படைத்தது அந்த இறைவனுக்கு பெருமையா?” “காளியாத்தா..மாரியாத்தா..இப்படி எந்தச்சாமியுமே என்னைக் காப்பாத்தவில்லையே” போன்ற கேள்விகளை பாலா முன்வைத்து,அவரே தீர்வும் சொல்லி விடுகிறார்.அந்தப்பிறவியில் இருந்து காக்கவும்,அடுத்த பிறவியில் இருந்து விடுவிக்கவும் அவனால் தான் முடியும்.ஈனப்பிறவிகளுக்கு மரணம்தான் தீர்வு.மூர்க்கச்சிந்தனையின் முடிவாக,வாழ இயலாதவர்களுக்கு அவன் அளிக்கும் வரம் மரணம்.அவன்தான் பாலாவின் கடவுள்(ஏனெனில் பிற கடவுள்கள் பிணத்தை உண்பதில்லை). குறிப்பு:சிலபடங்கள் எடுத்து முடிந்த பின்னர் தாமதப்படுவதைப்போல,ஏற்பட்ட தாமதம்.

Saturday 8 December 2012

எனது ட்வீட்டுகளில் சில..

நீ நல்லவன் தான்.ஆனா உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் கெட்டவங்ய #என்னை சுத்தி இருக்கிறவன் சொன்னது ____________________________________________________________________ ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமெனில், இறைவன் தற்காலிகமானவனே.. ____________________________________________________________________ திரைப்படங்களை ஆடியோ கேசட் வழியாக கேட்டு இன்புற்றது எமது சமூகம் மட்டுமே..அவ்வளவு கிரியேட்டிவிட்டி... _____________________________________________________________________ கடவுளுக்கு பூமி மிகவும் பிடித்துவிட்டது போல.ஆகவே குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கிறார்.. _____________________________________________________________________ ஆரம்ப கலவி மிக முக்கியமானது.. ______________________________________________________________________ உயிர் போகும் இறுதி நொடியில் இருக்கும் யோக்கியனாக ,வாழ்நாள் முழுதும் வாழ ஆசை.. _______________________________________________________________________ முடிவு என்பது ஒருமுறைதான்..அதை மாற்றினால் அது இன்னொரு ஆரம்பம் தான்.. ______________________________________________________________________ நீ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கெட்டவன் அல்ல.உனது அம்மாவால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நல்லவனே.. _______________________________________________________________________ எல்லாருக்கும் தெரிந்த போலியான உரையாடல், “எப்படியிருக்கே” “நல்லாயிருக்கேன்” என்பதே.. ______________________________________________________________________ ரத்தத்தை விட கண்ணீர் வலிமையுடையது.. _____________________________________________________________________ சுருங்கிய ரத்ததுளியின் நீட்சியில் பிரதிபலிக்கிறது உனது பிம்பம்.. ____________________________________________________________________ விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது காதல்... ____________________________________________________________________ கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.. கம்ப்யூட்டரை விட நீங்க ஸ்பீடா இருக்குறதா எண்ணி மனச தேத்திக்குங்க..#அவ்வ்வ் ____________________________________________________________________