Sunday 8 April 2012

எல்லா திசைகளும் பாதைகளே..

                            கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும்.ஆனால் அதே கஷ்டம் அளவிற்குமீறி வந்தால்,கடவுளை திட்டத்தான் செய்வார்கள். அதனால்தான் எப்போதும் கடவுளை வணங்கும் கூடலிங்கம்கூட அன்று திட்டிக்கொண்டு இருந்தார்.இதேபோன்ற ஒரு சூழ்நிலைதான் நாற்பது வருடங்களுக்குமுன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரத்தூண்டியது. அன்றைக்கு கூடலிங்கம் தனிமனிதன்.விட்டுச்செல்ல ஒன்றுமில்லாததால் நினைத்தவுடன் எங்கும் செல்லும் மனோநிலை இருந்தது.பெரும்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகளை எல்லாம் இழந்து,உயிர்வாழ ஊரைவிட்டு, நாட்டைவிட்டு  நடப்பது நடக்கட்டும் என்றுதான்,அன்று இலங்கை வந்தார்.வந்தபின் உழைத்து மீண்டும் புது உறவுகளை உருவாக்கி, சமுதாயத்தில் முக்கியப்புள்ளி என்ற நிலைக்கு வந்தபின்பும் கஷ்டம் மட்டும் விட்டு விலகவில்லையே..கண்ணுக்கு கண்ணான மனைவி,கவலைகள் போக்க குறைவில்லாத குழந்தைகள் எட்டு,அரண்மனை போன்ற சொந்தவீடு, விவசாயம் செய்ய குளத்துடன் கூடிய நாற்பது ஏக்கர் நிலம்,நூற்றுக்கணக்கான மாடுகள் இவைகளெல்லாம் தனது சுயஉழைப்பால் வாங்கி வாழ்ந்துவந்தாலும், இப்போது உள்ள நிலை மிகவும் அபாயகரமானது.இந்த பூமியில் எந்தநேரம் யுத்தம் வருமோ?என்ன நடக்குமோ?என்ற பயத்துடனே வாழும்நிலை மிகுந்த கஷ்டம்தான்.
                                    வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மற்றும் மகள்கள்தான் அவரது கவலைக்கு அடித்தளமிட்டவர்கள்.தினமும் அவர்கள் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் கூடலிங்கத்திற்கு சுத்தமாக உடன்பாடில்லை.தமிழீழம் பற்றி தீவிரமாக பேசும் நபர்களுடன் தனது பிள்ளைகள் வைத்திருந்த தொடர்பால்,தனது குடும்பம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.அதனாலேயே தற்போது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் கலந்தாகிவிட்டது.இனி எப்படி செல்வது என்பதைப்பற்றிய யோசனைதான்.கள்ளத்தோணி மூலமாகவாவது போய்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.இரு தினங்களுக்குப்பின் ஒரு தோணி கிளம்புவதாகவும், அதில் இடமிருந்தால் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார் அவருடைய நண்பர்.சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வெறும் மனிதராக செல்லும்நிலையில் இருந்தாலும், தன் பிள்ளைகளை திசைமாறவிடாமல்  கரைசேர்க்கும் முயற்சியில் இருந்தார் கூடலிங்கம்.இரண்டு நாட்களுக்குப்பின் அந்த படகில் இடமில்லையென்று நண்பர் சொல்லிவிட்டார்.ஆனால் மறுநாள் இரவு வேண்டிய ஒருவரின் படகு தமிழ்நாட்டிற்கு செல்வதாகவும்,அதில் அவர்களை ஏற்றி விடுவதாகவும் உறுதிகூறி,எப்போது,எங்கே வரவேண்டும் என்ற விபரத்தையும் சொன்னார் கூடலிங்கத்தின் நண்பர்.
                                                       மன்னாரில் இருந்து தலைமன்னாருக்கு மாட்டுவண்டியில் சென்று,இரவு அங்கு இருந்து படகில் கடல்வழியாக தமிழ்நாட்டை அடைவதுதான் திட்டம்.அதன்படி மறுநாள் மாலையில் தனது மனைவி,பிள்ளைகளை,கையில் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல முடியுமோ அவைகளை மட்டும் எடுக்கச்சொல்லி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டுக்கதவைப் பூட்டினார்.திரும்பாத வீட்டிற்கு பூடு ஒருகேடா?என புலம்பிக்க்கொண்டே,மாட்டுக்கொட்டகைக்கு சென்று,கதவைத்திறந்து மாடுகளை வெளியேற்றிவிட்டு,”எங்கேயாவது சென்று உயிர்வாழுங்கள்” என்றுகூறி,இத்தனைநாள் உழைத்த விவசாய நிலத்தை கடைசியாக பார்த்தவாறே நின்றுவிட்டார்.பிள்ளைகள் எல்லாம்,”அப்பா..சீக்கிரம் வாருங்கள்.இரவு நெருங்கிவிட்டது”என்று கத்தினர்.கூடலிங்கம் அவர்களை திரும்பிப் பார்த்தார்.அவர் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. அவர் நிலத்தைப்பார்த்து கலங்கினாரா?பிள்ளைகளைப் பார்த்து கலங்கினாரா? என்பதே புதிர்தான்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததைப்போலவே, தற்போது போவதை எண்ணி வருந்திக்கொண்டு கிளம்பினார் அவர்.
                                      தலைமன்னாருக்கு சென்று சேரும்போது,நன்றாக இருட்டிவிட்டது.அனைவரும் கீழே இறங்கி மாட்டுவண்டியை கடற்கரையிலேயே விட்டுச்சென்றனர்.அங்கு கூடலிங்கத்தின் நண்பர் நின்றிருந்தார்.அப்போது செல்லும் படகில் படகுக்காரரின் சகோதரிகள் இருவர் உடன் வருவதாகவும் கூறினார் அவர்.எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.சற்றுநேரத்தில் படகுக்காரர் வந்தவுடன் அனைவரையும் படகில் ஏறி உட்காரச்சொன்னார்.சுமார் அறுபது பேர் இருக்கும்.அவரவர் கையில் ஆளுக்கொரு பையை வைத்திருந்தனர்.அனைவரும் உட்கார்ந்தபின்,படகு நகர ஆரம்பித்தது.கூடலிங்கத்தின் நண்பர் அனைவருக்கும் கையை ஆட்டி, விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.பயணம் ஆரம்பித்து சிறிதுதூரம் செல்லும்போதே,அலைகள் ஆளுயரத்திற்கு வந்து கொண்டிருந்தன.யாரும் சத்தம் போடக்கூடாது என்று படகுக்காரர் சொல்லியிருந்தார்.அதனால் படகு அலையில் ஏறி இறங்கும் போதெல்லாம் அனைவரும் மூச்சைப் பிடித்துக்க்கொண்டு  உட்கார்ந்திருந்தனர்.அப்போது படகில் சிறிதுநீர் ஏறியதால் பளு அதிகமாக இருந்தது.உடனே படகுக்காரர், எந்தக்கேள்வியும் கேட்காமல் அனைவரின் கையில் இருந்த பைகளையும் கடலில் வீசியெறிந்தார்.யாரும் எதுவும் பேசவில்லை.உயிர் பிழைத்தால் போதும் என்று மட்டும்தான் இருந்தனர்.கண்முன்னே சிலமீட்டர் தூரத்தில் பனைமர உயரத்திற்கு பெரிய அலை வந்து கொண்டிருந்தது.அனைவரையும் நன்றாக பிடித்துக் கொள்ளச் சொன்னார் படகுக்காரர்.அடுத்த நிமிடம் அந்த பெரிய அலை அருகில் வந்துவிட்டது.எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அடுத்த நொடி தாழ்வாக இருந்த படகு செங்குத்தாக உயரத்திற்கு சென்றுவிட்டது.கடற்பரப்பு விரிவாக இருளைப் போர்த்திக்கொண்டு தெரிந்தது.சடாரென்று படகு கீழிறங்கி, வயிற்றில் புளியைக் கரைத்தது.இப்படி ஒவ்வொரு அலையையும் தாண்டி,பயணித்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஆகியிருக்கும்.படகு தென்கடல் ஓரமாக வந்து கொண்டிருந்தது.அப்போது படகுக்காரர் யாரும் வெளிச்சம் தரும் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்க்கொண்டார்.ஏனென்றால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும், அவர்கள் கண்ணில் சிக்கினால் சுட்டுக்கொன்று விடுவார்கள் .எல்லாரும் அதன்படியே இருந்தபோது படகு ஒருபெரிய கப்பல் அருகில் வந்துவிட்டதை படகுக்காரர் உணர்ந்தார்.
                                                       அது இலங்கை கடற்[படையின் கப்பல் அவர்களும் விளக்கை அணைத்துவிட்டு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால் தூரத்தில் வரும்போது தெரியவில்லை.அருகில் வந்தவுடன் கடற்படையில் ஒருவர் சிகரெட் பிடித்ததால் படகுக்காரர் பார்த்து விட்டார். வேறுதிசையை நோக்கி படகை செலுத்தினாலும் நகர மறுத்துவிட்டது.படைக்கப்பலில் ஒருவர் படகைப் பார்த்துவிட்டார்.உடனே அவர் மற்ற வீரர்களுக்கு சிங்கள மொழியில் ஆணையிட ஆரம்பித்தார்”அவர்களை சுடுங்கள்..அவர்களை சுடுங்கள்.”. அவ்வளவுதான்..படகில் இருந்த எல்லாரும் நீரில் குதித்து விட்டனர். படைக்கப்பலில் இருந்து விளக்கொளியும் அதைப்போன்றே தோட்டாக்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கூடலிங்கம் குடும்பத்தாரும் ,படகில் வந்த பயணிகளும் தென்கடல் அலையடித்து ஒதுங்கிய மணல்திட்டுகளில் இருந்த கடற்தாவரங்களுக்கு இடையே மறைந்து கொண்டனர்.கப்பலின் விளக்கு வேறுதிசையில் தேடும்போது மணற்திட்டு வழியாக நகர ஆரம்பித்தனர். அந்த மணல்திட்டுகளின் கரையோரப்பகுதியில் கடல் நீர் நெஞ்சளவு இருந்தது.கடற்படையின் தாக்குதலில் பாதிப்பேர் உயிரிழந்து விட்டனர்.கணவன் இறந்ததை மனைவியும்,குழந்தை இறந்ததை தாயும் உணரக்கூட அவகாசமில்லாத நிலை அது.இதையெல்லாம் பார்த்த பிறருக்கு,அவர்களின் உயிர்மீதான வேட்கை அதிகரித்தது.வேகமாக கடலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போதுதான் முந்தினநாள் கிளம்பின படகு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தார்கள். ஆட்கள் தப்பியிருப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.இன்று நாம் இருக்கும்நிலையில்தான் நேற்றும் அவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்தவாறே வேகமாக நடந்தனர்.
                                                கடலுக்குள் இருந்து கரையை நோக்கி நடக்கும்போது கால்களில் சங்குகளும்,அதைப்போன்று இருந்த பொருட்களும் கால்களில் குத்தின.அடுத்து காலகளில் சில பிணங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. அவ்வளவுதான்..அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.பயத்தில் உடல் உதறியது.ஓர் அடிகூட நகர முடியவில்லை.நேற்றைக்கு வந்தவர்களின் உடல்களை மீன்கள் உண்டு, மீதியாக கடலுக்குள் புதைந்து கிடந்தன.ஆனால் என்ன செய்வது?உயிர் இருக்கும் வரை பிழைப்பதற்கான முயற்சிகளையாவது செய்வோம் என பயணித்தனர்.படகுக்காரரின் சகோதரிகள் இருவரும் உடனிருந்தனர்.அங்கு இருந்தவர்கள் அவர்களின் அண்ணன் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்கள்” சீக்கிரம் வந்துவிடுவார்” என்று கூறியதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.அப்போது படகுக்காரர் மட்டும் தனியாக சென்று படகின் இஞ்சினை நிறுத்திவிட்டு, படகினை இழுத்துக்கொண்டே வந்தார்.பின்னர் எஞ்சியவர்கள் படகில் ஏறிஅமர்ந்து கொண்டு அதிகாலை வேளையில் கரையை நெருங்கினர். ராமேஸ்வரம் கோயில் கோபுரவிளக்கு உயிருக்கு ஒளியூட்டியது. சிறிதுநேரத்தில் படகில் இருந்த அனைவரும்  கரையில் வந்து சேர்ந்தனர். உடனே தமிழக ரோந்துப்படைகள் அவர்களை சுற்றிவளைத்து,பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.பின்னர் கூடலிங்கத்தின் குடும்பத்தார் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு ஊர்மக்கள் பழைய உடைகளை அவர்களுக்கு கொடுத்து உதவினர்.அகதிகளின் முகாமைவிட்டு அவர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று தடை போடப்பட்டிருந்தது.கூடலிங்கம் தான் பழைய நிலையைவிட மோசமாகிவிட்டதை உணர்ந்தார்.இப்போது தனது சொந்தநாட்டிலேயே அகதியாக இருப்பதை எண்ணி நொந்து கொண்டார். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் பாதைகளே என்ற நம்பிக்கை,அவர் கண்களில் கம்பீரமாக இருந்தது.

Wednesday 4 April 2012

நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்

                                     நான் காற்றிலே மிதப்பது போன்ற உணர்வு என்னை பரவசமடையச்செய்து கொண்டிருந்தது.எப்போதிருந்து அந்த உணர்வு எனக்கு வந்தது என்று சரியாக சொல்லமுடியவில்லை.சில நாட்களாக வலியுடன் போராடிக்கொண்டிருந்த நான்,நேற்றிரவு வழக்கம்போல் தான் வலியுடன் தூங்கினேன்.மறுநாள் காலை பரவசநிலையுடன் பார்த்தால்,எனது உடலைச்சுற்றி அம்மா,அக்கா,அண்ணன் எல்லாம் அழுதுகொண்டிருந்தனர். அப்போதுதான் நான் இறந்து விட்டிருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். அடடா!என்ன ஆனந்தநிலை!பறப்பது போன்றே இருந்தது.இவ்வளவு நாளும் சுமந்து வந்த உடலை,பாரத்தை இறக்கி வைத்துவிட்டதால்,மிகவும் லேசாக இருப்பதாக உணர்ந்தேன்.ஒருவேளை நான் உயிரோடு இருந்ததே இப்படி ஒரு பரவசநிலையை அடையத்தானோ?என நினைத்தேன்.
                                    வீட்டிற்குள் ஆட்கள் நிறைந்து இருந்தனர்.அம்மா இடைவெளியின்றி அழுது கொண்டிருந்தாள்.நான் மிகுந்த சங்கடத்துடன் மற்றவர்களையும் பார்த்தேன்.அக்காவும்,அண்ணனும் மிகவும் வருந்தித்தான் போனார்கள்.தன்னில்பாதியை இழந்ததால் வந்த வருத்தம்தான்.தந்தையை தேடிப்பார்த்தால்,தூணில் சாய்ந்து உட்கார்ந்து வெறுமையை  நோக்கிக் கொண்டிருந்தார்.எல்லாமே வெறுமை என்பதை இழப்பு வரும்போதுதான் உணர்ந்துகொள்ள முடியும்போல.அய்யோ!எவ்வளவு சிரமத்தினை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன்.ஒரு காலகட்டத்தில்,அப்போது இருக்கும் மனநிலையில் நாம் சரி என்று செய்த தவறான செயல்கள்,பின்னாளில் நமது மனம் பக்குவப்படும்போது,அந்த செயலை எண்ணி சொல்லமுடியாத அளவிற்கு வேதனையைத் தருகிறது. அழுதேன்.இறந்த என் உடலைப்பார்த்து அவர்கள் அழுகிறார்கள்.அதனால் பாதிப்படைந்து இருக்கிற அவர்களின் மனதைப்பார்த்து  நான் துக்கப்படுகிறேன். என் உடலைப்பார்க்க உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.பார்க்க வந்தவர்கள் பார்க்காமலேயே வெளியில் உட்கார்ந்திருந்தனர். இதுவரை நான் நல்லவர்,கெட்டவர் என்று வரையறுத்து வைத்திருந்தவர்களின் உண்மைநிலையைக் காணக்கூடிய வாய்ப்பு, அந்தநிலையில் எனக்குக் கிடைத்திருந்தது.
                                              என் உடலைப்பார்க்க வந்திருந்த பலரும் என்னைப்பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒருசிலர் இவன் நல்லவன் என்றுகூறி,நான் எனக்குத்தெரியாமலேயே செய்த சில விஷயங்களைக் கூறினர்.சிலர் நான் நல்லவை என்று நினைத்து செய்ததைக்கூறி,இவன் சரியானஆள் இல்லை என்றும் கூறிக்கொண்டு இருந்தனர்.இப்படியெல்லாம் ஆளாளுக்கு பேசிக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மௌனமாகவே உட்கார்ந்திருந்தனர்.அவர்கள் மனமோ வேறுஒரு பாதைக்கு போய்க்கொண்டிருந்தது.வந்திருந்தவர்களில் சிலர் வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் ஏதோ கோபத்துடன் வந்திருந்தனர்.அவர்களின் மனமோ மௌனமாக இருக்கும்போது,கோபத்தை ஒளித்துவைத்து பழிவாங்குதலைப்பற்றியே  சிந்தித்துக் கொண்டிருந்தது.கோபத்தைக் கொல்லும் மனிதன் குரோதத்தை வளர்த்துக்கொள்வது எனக்கு அப்போதுதான் புரிந்தது.ஒரு ஓரமாக என் அக்காமகள் பூனையிடம் என் உடலைக்காட்டி, நான் இறந்து விட்டதாகக்கூறி அழுத முகத்துடன் இருந்தாள்.நான் செய்த செயல்களை அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்.பல விஷயங்கள் மிகவும் தாமதமாகப் புரிந்தது.எந்த ஒரு செயலை செய்யும்போதும் மிகவும் கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.ஏனெனில் நாம் செய்யும் செயல்களே நமக்கு எதிரியாகவும்,நாம் சொல்லும் சொற்களே நமக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படக்கூடியவையே.
                                               சிறிதுநேரத்தில் என்னுடலை குளிப்பாட்ட வேண்டும் என்றார்கள்.நான் படுக்கையில் இருந்தபோது என் அம்மாதான் என்னைக் குளிப்பாட்டுவாள் மன்னிக்கவும் சுத்தப்படுத்துவாள்.ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து,அதில் துணியை நனைத்து உடம்பெல்லாம் துடைத்து விடுவாள்.இன்று பலர் மத்தியில்,ஒருகுடம் தண்ணீரை எடுத்துவந்து என்னுடலின் மீது அப்படியே சாய்த்துவிட்டனர்.என் அம்மா ஓவென்று கதறினாள்.வெளியில் சென்றிருந்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டின்முன் கூடிவிட்டனர்.அப்போதே எனக்குப் புரிந்தது.என் உடலை வெளியேற்ற தயாராகி விட்டார்கள் என்று.சிறிதுநேரம் கழித்து,எல்லாரும் என் உடலை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்கு கொண்டுசென்றனர்.போகும்போதே,என்னுடன் வருபவர்கள் எல்லாம் குளிக்கவேண்டும் என்று இறைவன் நினைத்தானோ என்னவோ மழை வந்தது.பலர் என் உடலைவிட்டு ஓடி ஒதுங்கினர்.ஒருசிலர் குடையில் தன்னை மறைத்துக் கொண்டனர்.வானம் மனிதனை சுத்தப்படுத்தவும், சுகப்படுத்தவும் தண்ணீரை சல்லடைமூலம் சலித்துத்தருகிறது. ஆனால் இந்த மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.கொஞ்சநேரம் கழித்து என் உடலை மேலும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு குழிதோண்டி வைத்திருந்தனர்.
                                            நான் எப்போதுமே என் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிவிட்டாலே பத்துமுறை கழுவுவேன்.ஆனால் இப்போது சேறு போன்று இருந்த மண்குழிக்குள் என் உடலை வைத்து மூடினர்.எனக்குரிய சொந்த இடம் அதுதான் என்று சொல்லிக்கொண்டனர்.நான் முன்னமெல்லாம்,எவ்வளவோ அதிகாரம் பண்ணவேண்டும்,நிலங்கள் சொத்துக்களைச் சேர்த்து வாழவேண்டும் என்று எண்ணியதுண்டு.ஆனால் இப்போது இவர்களாகவே ஒரு குறிப்பிட்ட இடத்தை எனக்கு தானமாகக்கொடுத்து,என் ஆசையினை முட்டிவிற்கு கொண்டுவந்து விட்டனர்.இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது என்று எனக்குப்புரிந்தது.பின்னர் எல்லாரும் அவன் மறைந்துவிட்டான் என்று கூறிக்கொண்டு சென்றுவிட்டனர்.ஆனால் நான் மட்டும் பரவசநிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறேன்.நான் இருப்பதும், அவர்களைப் புரிந்து கொண்டிருப்பதும் யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் நான் எங்கிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனாலும் நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------
                நீ இந்த பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன்தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச்சுரக்க வைத்தவன் இறைவன்.நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட, அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.
                                                                -தாகூர்

Tuesday 3 April 2012

அடுத்தவன் டைரி

                  எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதில்(பாடப்புத்தகத்தை தவிர்த்து) ஆர்வம் அதிகம்.அது நாளடைவில் கையில் கிடைக்கும் பேப்பர்களையெல்லாம் படிக்கும் பழக்கமாகிவிட்டது.மளிகைகடையில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில்,வாடிக்கையாளர்கள் இல்லாத சமயங்களில் பொட்டலம் மடிக்க வைத்திருக்கும் காகிதங்களை எல்லாம் படித்த பின்னரே உபயோகப்படுத்தும் அளவிற்கு வந்துவிட்டது.அன்றும் அப்படித்தான், மதியநேரம் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதபோது,கடைக்கு வந்திருந்த பழைய நோட்டு புத்தகங்களை பிரித்து வைத்துக்கொண்டிருந்தேன். அவைகளுடன் சேர்ந்து,சரியாக முப்பத்தைந்து  வருடங்களுக்கு முந்தைய டைரி ஒன்று இருந்தது.அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப்பற்றி அறிய முற்படுவது அநாகரிகம் என்றாலும்,அதில்தானே நமக்கு ஆனந்தம்.மேலும் கிடைத்ததை எல்லாம் படிக்கும் பழக்கம் வேறு.அது மட்டுமல்ல,இந்த கிராமத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னரே ஒருவர் டைரி எழுதியிருக்கிறார் என்றால் மிகுந்த ஆச்சரியமாகத்தான் இருந்தது.சும்மா இருப்பேனா?அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.அதை எழுதியிருந்தவர் ஒரு ஆண்.அவரை எழுதவைத்திருந்தது ஒரு பெண்ணும்,அவள் நினைவுகளும்.
                                          அந்த டைரியின் தொடக்கத்திலேயே எழுதியவருக்கு போதுமான எழுத்தறிவு இல்லை என்பது தெரிந்தது.ஆரம்ப வகுப்பில் குழந்தைகள் எழுதுவது போன்று கோணல்மாணலாக எழுத்துக்கள் இருந்தன. புள்ளிவைக்க வேண்டிய இடங்களில் வைக்காமலும்,துணையெழுத்து போடவேண்டிய இடங்களில் போடாமலும் இருந்தார்.மேலும் குறிலுக்கும், நெடிலுக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதியிருந்ததால் மிகுந்த வேடிக்கையாக இருந்தது.இருந்தாலும் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவாகப் புரிந்தது.ஒரு மனிதனின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதா என்ன?. டைரியில்,அவர் அந்தப்பெண்ணை பார்த்ததில் இருந்து துவங்கியிருந்தது. அவளைப்பார்த்து சிரித்தபோது,அவள் சுற்றிமுற்றி பார்த்து,யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, திருட்டுத்தனமாகச் சிரித்ததை அவருக்குரிய எழுத்தில் அழகாக எழுதியிருந்தார்.கிராமப்பெண்ணின் வெட்கத்தையும்,அவளை வெட்கப்பட வைத்த தன்னையும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.காட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தனக்காகவே ஈடுபாட்டுடன் செய்து, அவள் கொண்டுவரும் பதார்த்தங்களைப்பற்றியும்,அதனை அவளுக்கே தான் ஊட்டி மகிழ்ந்ததையும் எண்ணி பூரிப்படைந்திருந்தார்.இவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடிய டைரியை இனி நீங்களே படியுங்கள்...
                                             “சுப்பையா என்பது என்பெயர்.எல்லாரும் என்னை சுப்பு என்றுதான் அழைப்பார்கள்.நண்பர்கள் மட்டும் கேலியாக சூப்பு என்று கூப்பிடுவார்கள்.ஆனால் என்னைப்பிடித்த அவள் மட்டும் சூப்பரு என்று கூறிமகிழ்வாள்.எனக்கு கொலுசு சத்தம் என்றாலே பிடிக்காது.சல்லிட்டு மாட்டுக்கு சலங்கை போட்டது மாதிரி என்று சலித்துக்கொள்வேன்.ஆனால் இப்போது?அவள் கொலுசுச்சத்தம் கேட்டால்தான் கொஞ்சநஞ்ச தூக்கமே வருகிறது.காட்டில் கடுமையாக வேலைசெய்து கொண்டிருந்தாலும்,அவள் வந்த உடனே, உடலில் களைத்திருக்கும் செல்களெல்லாம் அப்படியே செத்து உதிர்ந்துவிடும்.அப்போதுதான் காட்டில் நுழைந்தவன்போல சுறுசுறுப்ப்பாகி விடுவேன்.அவளுடன் பேசி,பழக ஆரம்பித்ததில் இருந்தே எவ்வளவு நாட்கள் எப்படி ஓடின என்று கணக்குப்பார்க்க முடியவில்லை.
                                                                     எங்கள் ஊரில் சினிமா கொட்டகையில் படம் ஓடுவதில்லை.அதனால் பக்கத்து ஊரான பண்ணைப்புரத்திற்குத்தான் சினிமாவிற்குப்போவோம்.இரவில் பஸ் கிடையாது என்பதால், வரும்போது ரெண்டுமைல் நடந்துதான் வருவோம்.அன்றொருநாள், அவள் தன்குடும்பத்தினருடன் சினிமாவிற்குப் போகிறாள் என்றசேதி தெரிந்தவுடன்,நானும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டேன். இடைவேளையில் யாருக்கும் தெரியாமல் நான்கொடுத்த கடலைஉருண்டை,சோளப்பொரியை ஆசையுடன் வாங்கிக்கொண்டாள். படமும் முடிந்தது.எனக்கு முன்னால் அவள் குடும்பத்தாருடன் நடந்துபோய்க்கொண்டு இருந்தாள்.கடைசியாக நான் சைக்கிளை மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தேன்.திடீரென்று அவள் கால் சறுக்கி,சுளுக்கு பிடித்ததுபோல நொண்டிநொண்டி நடந்தாள்.அந்தநேரம் பார்த்து நான் பெல்லை அடித்தபடியே சைக்கிளில் வந்தேன்.அவள் அம்மா,”தம்பி இவளை வீட்டில் விட்டுவிடு.பாவம் இவளால் நடக்க முடியவில்லை”என்றார்கள்.நானும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சரி என்றேன்.அவள் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபின் கொஞ்சதூரம் போயிருப்போம்.அவள் சைக்கிளை நிறுத்தச் சொன்னாள்.என்ன என்று கேட்டதற்கு அவள்,”சுளுக்கெல்லாம் ஒன்றும் இல்லை.உங்க கூட வரணும்னுதான் சும்மா பொய் சொன்னேன்.இப்படி சைக்கிள் பின்னாடிதான் உட்காரணும்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்”என்றாள்.”அடிப்பாவி இதுக்குத்தான் இந்த நாடகம் போட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே,அவளை முன்னால் உட்காரவைத்து சைக்கிளை நகர்த்தினேன்.அவள் அருகாமை தந்த வெப்பம்,அவள் கூந்தல் மணம்,அவளின் கொஞ்சும் பேச்சு இவையெல்லாம் அவளின்பால் என்னை மேலும் ஈர்த்தன.இருவரும் காதலிப்பதாக,மிக ரகசியமாக இருட்டுக்குள் பேசி மகிழ்ந்தோம்.அந்த தருணத்தில்,என்னைப்போல யாரவது இவ்வுலகில்  மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா என்றால்,அது சந்தேகம் தான்.பின் அவளை வீட்டில் விட்டு,நான் போய் தூங்கினேன்.மறுநாள் காலை நேற்று நடந்ததில் எது கனவு,எது நிஜம் என்று தெரியாத அளவு குழம்பியிருந்தேன்.
                                             அன்றுமாலை,அவள் வீட்டுப்பக்கம் போனேன்.அப்போதே அவளின் அப்பா என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்.சிறிதுநேரம் கழித்து அவரே என்னிடம்,”இனிமேல் இந்தப்பக்கம் வராதே,அவளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கண்ணை மட்டும் எடுத்துவிடுவேன்”என்று கடுமையாகச்சொன்னார்.நாங்கள் நேற்று இரவு பேசியது எப்படியோ இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.இருட்டில்தான் புலன்கள் அதிக விழிப்புடன் இருக்கும் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது.அவளுக்கு சரியான அடிஉதையாம்.ஆனால் அவள் அசராமல் என்னைத்தான் கல்யாணம் செய்வேன் என்று கூறினாளாம்.பக்கத்துவீட்டு பாட்டி சொன்னாள்.நாளை பார்க்கலாம் என்றுஎண்ணி வீட்டிற்கு வந்து, என்ன பண்ணலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்”.
                                         அந்தநேரத்தில் கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவும், அந்தப்பக்கத்தின்மூலையை மடித்துவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தேன்.மனம் முழுவதும் சுப்பையாவின் காதல் நினைவுகளிலேயே உழன்றது.தான் அறிந்த எழுத்தின் வாயிலாக,தனது வாழ்வில் நடந்ததை உணர்ச்சிபூர்வமாக கூறும் அவரது காதலை எண்ணி மெச்சிக்கொண்டேன்.மிச்சத்தை இரவு படிக்கலாம் என்று இருந்துவிட்டேன்.இரவு எப்போதுவரும் எனக்காத்திருந்து, எல்லாப்பொருட்களையும் கடைக்குள் எடுத்து வைத்துவிட்டு, டைரியைப் புரட்டினேன்.அதில்....
                                             ” விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்.ஒருநிமிடம் இதயம் தனது வேலையை மறந்துவிட்டது.எழுந்து நின்றால் உடலில் எலும்புகளே இல்லை என்னும் அளவிற்கு தளர்ந்துவிட்டது.அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.கண்களில் தரைதாரையாகக் கண்ணீர்.எண்ணம் அவளைப்பார்க்க வேண்டும் என்றது. அவள் தீவைத்துக்கொண்டபின் சுய உணர்வோடுதான் இருந்திருக்கிறாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்.அவளைப்பார்க்க சைக்கிளை எடுத்து மிதித்தேன்.அடுத்த நிமிடம் அவள் முன்னால் இருந்தேன். அவள் சொந்தக்காரர்கள் எல்லாம் ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அவளோ கூந்தல் மணம் இழந்து,கொஞ்சும் பேச்சு இழந்து,கொல்லும் சிரிப்பு இழந்து கரிக்கட்டையாக கிடந்தாள்.தீயை தீ எரிக்க முடியாது என்பதால்,அவள் கண்கள் மட்டும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. அவள் என்னிடம், ”உன்னைக்கல்யாணம் பண்ணினால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் செத்துவிடுவோம் என்று சொன்னார்கள்.அவர்களுக்கு சாதிதான் முக்கியமாம்.எனக்கு நீதான் முக்கியம்.நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்.அதான் இப்படி செஞ்சேன்”என்றாள்.எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது பிறப்பைக்குறித்த குறையை எப்படி தீர்த்துக்கொள்வது? யாராவது விளக்கம் கூறமுடியுமா? என்று உரக்கக் கத்திவிட்டு வீட்டிற்கு வந்தேன்.இரவும் பகலும் எப்போது வந்தது?எப்போது போனது?என்றே தெரியவில்லை.இரண்டு நாட்களாகி விட்டன.அவள் இறந்து விட்டாளாம்.நான் மட்டும் என்ன வாழ்ந்து கொண்டா இருக்கிறேன்.இதுவரை நான் கேள்விப்பட்டிருந்த,நடைபிணம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே நான் மாறிவிட்டேன்.இனிமேல் எந்த ஆதாரத்தோடு இந்த பூமியில் வாழ்வது?”
                                       இத்துடன் அந்த டைரி முடிவடைந்திருந்தது.மனதில் ஏக கனம்.அடுத்தவர் டைரியை ஏன் படிக்கக்கூடாது என்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது.சுகங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கின்ற நாம் துக்கங்களை மறுத்து விடுகிறோம்.அதனால்தான் நாம் நாமாகவே இருக்க முடிவதில்லை.யாரைச் சந்திக்கிறோமோ,அவர்களின் மனநிலைக்கே, அவர்களாகவே மாறிவிடுகிறோம்.அந்தநிலைதான் எனக்கும்.சுப்பையாவின் எண்ண ஓட்டத்தில் நானும் கலந்து விட்டேன்.தூக்கம் வராத இரவு வாழ்வின் இறுதிநாள்வரை காத்திருந்தது போலாகி விட்டது.விடிந்ததும் முதல் வேலையாக டைரியை எடுத்துக்கொண்டு,சுப்பையாவின் முகவரிக்குச் சென்றேன். “இந்த வீட்டில் சுப்பையா என்று யாராவது இருக்கிறர்களா?” என்றேன்.ஒரு பெண்,”இல்லீங்க,எங்களுக்கு முன்னாடி யாராவது இருந்திருக்கலாம்.எனக்குத் தெரியாது”என்றாள்.புதுப்பெண் போல தெரிந்தாள். யாரிடம் கேட்கலாம் என்று எண்ணியபோது,நான்குவீடு தள்ளி இருக்கும் மேரிப்பாட்டி தென்பட்டார்.அவரிடம்,”முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் இந்தத்தெருவில் இருந்த சுப்பையா எங்கே?”என்றேன்.அப்போதுதான் அந்தப்பாட்டி,”ஆமாம்ப்பா இருந்தான்.அவன் காதலிச்ச பொண்ணு தீ வச்சுக்கிட்டு செத்துப்போயிட்டா.அந்த பொண்ணு செத்த நாலுநாளிலேயே அவனும் செத்துப்போயிட்டான்”என்று சொன்னார்.என் கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது.அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை.

குறிப்பு:இந்த சம்பவம் தேனி மாவட்டம்,தேவாரத்தில் நடந்தது.