Showing posts with label Kombai. Show all posts
Showing posts with label Kombai. Show all posts

Monday, 26 March 2012

கோம்பை வெள்ளை

          ரங்கசாமி பாட்டையாவிடம் கதைகேட்டால்,நம்மைச்சுற்றி என்ன நட்க்கிறது என்றேதெரியாது.அவர் சொன்னால்தான் தெரியும் நமது வாயில் கொசு குடும்பம் நடத்துவது.அதன்பின்னர் வாயைமூடிக்கொள்ளவும் அவகாசம் தருவார்.அப்பேர்ப்பட்ட கதைசொல்லி அவர்.எப்படி இவ்வளவு நன்றாக கதைசொல்லுகிறீர்கள் எனக்கேட்டால், கதைசொல்லுவதில் அவருக்கே வாத்தியாராக சின்னச்சாமி கவுண்டரைச் சொல்லுவார்.அவர் சிறுவயதில்  மாடுமேய்க்கும்போது சின்னச்சாமி கவுண்டர் கதைசொல்ல ஆரம்பித்துவிட்டால்,மாடுமேய்ந்து, தானாக வீட்டுக்குப்போனபிறகுதான் சுயநினைவே வருமாம்.அவரோட டிரெய்னிங்குல்ல சும்மாவா என்று பெருமிதமாக கூறுவார்.போன தைப்பொங்கலுக்கு ஊருக்குப்போனபோது ஜல்லிக்கட்டைப்பற்றி பேச்சு திரும்பியது.ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையைக்கேட்டவுடன் ரங்கசாமி பாட்டையாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,புத்துணர்வு எல்லாமும் ஒன்றாக இருந்தது.உடனே அவர் ஜல்லிக்கட்டைப்பற்றி பலவிஷயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.அதில் ஒன்றுதான் கோம்பை வெள்ளை.அது ஒரு ஜல்லிக்கட்டுகாளை என்பது மட்டுமல்ல.கோம்பையின் அடையாளம் என்றும் கூறுவார்.இனி அவர் சொன்னது...
                            மாடு வளர்ப்பதில் நேக்கு தெரிந்தவர்கள் நம்மூரு கவுண்டமாரு.வளர்ப்புன்னா அப்புடி ஒரு நேர்த்தியாக இருக்கும். அப்போவெல்லாம் நம்ம ஏரியாவுல ஊர் ஊருக்கு ஜல்லிக்கட்டு நடக்கும்.பக்கத்து ஊரு பல்லவரயன்பட்டியில் அந்தவருசம் நடந்த ஜல்லிக்கட்டுல ஒருசிறு கன்னுக்குட்டி பலபேரை குத்திப்போட்டுக்கிட்டு இருக்குன்னு ஒரே பரபரப்பு.பலஊருகளில்  இருந்து மாடுபிடிக்க வந்தவர்கள் எல்லாம் அதைப்பார்த்து தெறிச்சு ஓடுனாங்க.ஜல்லிக்கட்டு நடத்திய பல்லவராயன்பட்டிக்காரர்களுக்கு கடுமையான கோபம்.கோம்பைக்காரன் மாட்டைப்புடிக்கிறியா இல்லியான்னு சத்தம் போட்டார்கள்.அப்போதான் பலருக்கும் தெரியுது அது கோம்பைமாடுன்னு.சித்துக்கன்னுக்குட்டியா இருந்தாலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு.முட்டையில இருக்குற அளவுக்கு வெள்ளைகலர்ல வெயில்ல பளபளன்னு,பெண்கள் முடியில் சிக்கல் எடுக்கும் சிணுக்கருக்கி போல கூர்மையான செந்நிற கொம்புகளுடன் புகுந்து விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்துக்குமேல்  பல்லவராயன்பட்டி ஊர் ஆட்களெல்லாம் சேர்ந்து அந்த கன்னுக்குட்டியை,ஒருபக்கமாக இருந்து விரட்டி,அருகில் இருந்த தாழங்குளத்தில்,நிறைந்திருந்த தண்ணீரில் இறக்கி விட்டார்கள்.அந்த கன்னுக்குட்டி நீந்தி கரைக்கு வரும்போதெல்லாம்,கரையில் இருந்த ஆட்கள் கம்பு,கல்லை வைத்து அடித்து மறுபடியும் தண்ணீருக்குள்ளேயே விரட்டி விட்டார்கள். அப்பொழுதுதான் மாட்டுக்கு சொந்தக்கார கவுண்டர் சண்டைக்கு போனார்.அவரையும் ஏறுக்குமாறா பேசி விரட்டி விட்டார்கள்.பிறகு கவுண்டர்,”இருங்கடா..ஊருல இருந்து ஆளைக்கூட்டிக்கிட்டு வரேன்”னு கோபமாக கிளம்பிட்டார்.ஓடைவழியாக ஓட்டஓட்டமாய் வரும் கவுண்டரைப்பார்த்து வடக்குத்தெரு நாடார்கள், ”என்னாப்பா..இம்புட்டு வேகமா கோவமா வர்ற”என்று கேட்கவும்,அவர் சம்பவத்தை விளக்கியதுதான் தாமதம், வடக்குத்தெருவில் இருந்து ஒருபெரும்படையே கிளம்பிவிட்டது.”எவண்டா எங்கஊரு மாட்டை அடிக்கிறவன்”னு கூவிக்கிட்டே..
                                                        அப்புடி கோபமாக கிளம்பிய ஆட்களெல்லாம் போனவேகத்துக்கு,புழுதி பறக்குது.இதெல்லாம் நடக்கும்வரைக்கும் அந்த சிறுகன்னுக்குட்டியை நீந்தவைத்து கிறங்கடித்து விட்டார்கள்.அதைப்பார்த்த உடனே கோம்பைக்காரர்களுக்கு கோபம் தாங்கமுடியவில்லை.மிகுந்த கோபத்துடன் அவர்கள் போட்ட அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கியது..அப்படிஒரு அடியை அவர்கள் வாழ்நாளில் வாங்கியிருக்க மாட்டார்கள்.ஒரு சிறுகன்றுக்குட்டி என்றும்பாராமல் வதம்செய்தால் யாருக்குத்தான் கோபம்வராது?அப்புறம் பெரியசண்டையும் நடந்தது.மாட்டையும் புடிச்சுட்டு வந்துட்டாரு கவுண்டரு.
 மாட்டைப்புடிச்சுட்டு வந்தவர் நேராக நாடாக்கமாரு திருக்கண்ல வந்து மாட்டைக்கட்டிப் போட்டுவிட்டார்.”என்னாப்பா இது” என்று எல்லாரும் கேட்டபோது, ”இந்த கன்னுக்குட்டியை மீட்டு வந்தது நீங்கதானே..நீங்களே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்”என்று சொல்லிவிட்டு ,அவர்பாட்டுக்கு போய்விட்டார்.அப்பொழுதுதான்” நான் வளர்க்கிறேன்”என்று முன்வந்தவர் அய்யாச்சாமி நாடார். எல்லாரும் சரியென்று ஒத்துக்கொண்டார்கள்.அவரும் மாடு வளர்ப்பில் சளைத்தவர் அல்ல. வெள்ளைகாளையை வீம்பாக,வீரமாக வளர்த்தார்.கோம்பைக்கு மேற்கே ஆலமரங்கள் நிறைந்திருக்கும் மணல்காடான கட்டையாலா,நாலாலா அப்புறம் சந்தையாலா காட்டுக்குத்தான் காளைக்கு குத்துப்பழக்குவதற்கு கூட்டிக்கிட்டு போவார். மணலில் நடந்தால்தான் காலுக்கு தெம்பு.அப்புறம் ஆலமரத்தில் வாழைமரத்தைக் கட்டிவத்து குத்துப்பழக்குவார்.வாழைமரம் தான் கொம்புக்கு இதமாக இருக்குமாம்.இப்படி ஒவ்வொருநாளும் வெள்ளைகாளையை பார்த்து பார்த்து பக்குவமாக வளர்த்தார் அய்யாச்சாமி நாடார்.


                              கோம்பையில் ஜல்லிக்கட்டு என்றால் மணியார்மார்சாவடியில் துவங்கி,தேரடிவரைக்கும் காளைகள் ஓடும். அந்தவருட பொங்கலுக்கு  கோம்பைவெள்ளை, வாடிவாசலில் இருந்து கிளம்பிய உடனேயே பத்துப்பேரின் ரத்தத்தை பார்த்துவிட்டது.அதோடு அடங்காமல் திருக்கண்ணில்  கட்டிவைத்திருந்த கரும்புக்கட்டை குத்தி எறிந்து,பிறகு காளியம்மன் கோயில் வாசலில் நிறுத்தி வைத்திருந்த கண்திருஷ்டி பொம்மையை நார்நாராக்கி, யாருக்கும் அடங்காமல் தானாகவே வீடுவந்து சேர்ந்தது.உள்ளூர்காரர்கள் உள்ளூர்மாட்டை பிடிக்கக்கூடாது என்ற சம்பிரதாயம் இருந்தாலும், அன்றைக்கு உள்ளூர்காரர்களாலேயே கோம்பைவெள்ளையை நெருங்க முடியவில்லை.அந்த ஜல்லிக்கட்டில் கோம்பைவெள்ளைக்கு ஏறின மவுசு,அதன்பிறகு குறையவே இல்லை.ஒருமுறை உசிலம்பட்டி ஜல்லிக்கட்டுக்கு கால்நடையாகவே கோம்பைவெள்ளையை கூட்டிக்கொண்டு போனார்கள்.அந்த ஜல்லிக்கட்டில்  நடந்த சம்பவங்களை இப்போது நினைத்தாலும் குலைநடுங்கிவிடும். கன்றுக்குட்டியில் இருந்து பார்த்ததினால் அதன் வளர்ச்சி நமக்கு தெரியவில்லை.மற்ற மாடுபிடிக்காரர்கள் சொன்னபிறகுதான், அதன் திமிரே கோம்பைக்காரர்களுக்கு தெரியவந்தது. கோம்பைவெள்ளையை பிடிக்கும் திட்டத்தோடு பலஊர்க்காரர்களும் ஒரு கோப்பாகத்தான் வந்திருந்தார்கள்.வாடிவாசலில் இருந்து செருக்கடித்துக்கொண்டே கண்ணை உருட்டி பார்த்தது.ஒரே தவ்வு தவ்வி ஓடாமல், அப்பிடியே திரும்பி நின்றுவிட்டது.ஓடும் என்று எதிர்பார்த்து பின்னாடியே போன மாடுபிடிக்காரர்கள் திகைக்கக்கூட நேரமில்லாமல் குத்துப்பட்டு மண்ணில் சாய்ந்தார்கள்.அப்படியே திரும்பி எதிரே நிற்பவர்களை பார்த்தது.அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே கொம்பால் சுண்டிவிட்டது. அன்றைக்கு என்ன ஆனதோதெரியவில்லை வாடிவாசலுக்கு முன்னாலேயே நின்றுகொண்டு,வேறு மாடுகளுக்கும் வழிவிடாமல் மறியல் பண்ண ஆரம்பித்தது.”மாட்டுக்காரன் மாட்டை புடிக்கிறியா இல்லை சுட்டு பிடிக்கவா” என்று ஜில்லா கலெக்டர் சொன்னபிறகுதான், அய்யாச்சாமி நாடார் அசால்டாக போய் கோம்பைவெள்ளையை பிடித்துக்கொண்டு வந்தார்.அப்பொழுதும்கூட, அது அரைக்கோபத்தோடுதான் அவர் பின்னாலேயே போனது.அன்றைக்கு கோம்பைவெள்ளை குத்திய ஆட்களை எல்லாம்,ஒரு லாரியில் ஏற்றித்தான், மதுரை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.
                        இப்படி ஏரியா முழுக்கவும்,பெயர்வாங்கிய கோம்பைவெள்ளையை  விலைக்கு வாங்க பல ஜமீந்தார்களும் போட்டி போட்டார்கள்.வயல் தருகிறேன், ஏலமலை தருகிறேன் என்று  அவரவர்கள் ஒருவிலை சொன்னார்கள்.எல்லாவற்றுக்கும் அய்யாச்சாமி நாடார் முடியாது என்று  மறுத்து சொல்லிவிட்டார்.அந்தநேரத்தில் கோம்பைவெள்ளைக்கு சமானமா பெயர்வாங்கியது, நடுத்தெரு மண்ணடிசாமி கவுண்டருடைய கொராலு. பிற்பாடு கோம்பையில் நடந்த ஒரு ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சாதிச்சண்டை பெரிய கலவரமாகி,பலபேர் செத்துப்போனார்கள்.அதில் இருந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று ஆர்டர் போட்டதினால்,பதினைந்து வருடமாக ஜில்லாவிலேயே ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.அப்புறம் என்ன கோம்பை வெள்ளையாவது,கொராலாவது,எல்லாவற்றையும் ஏரில் பூட்டி உழவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.எத்தனையோ பேர் வீட்டில் இழவு விழச்செய்த கோம்பை வெள்ளை அன்றையில் இருந்து உழவு செய்ய ஆரம்பித்துவிட்டது.                    

Thursday, 26 January 2012

துத்தித்தி கிழவி

            என்னுடைய சிறுபிராயத்தில்(இப்போதும்கூட நான் என்னை அப்படியே எண்ணிக்கொள்வது ஒருபுறம்)காலையில் என்னை திடுக்கிடச்செய்து தூக்கத்திலிருந்து எழுப்பும் குரலுக்கு சொந்தக்காரிதான் துத்தித்தி கிழவி. மேற்கே அரண்மனைத்தெருவில் இருந்து கிழக்கே காளியம்மன் கோயில் வழியாக தேரடி வரையில் காலைவேளையில் மிரட்டும் குரலோடு அயராது தினமும் செல்பவள் அவள்.அந்த நேரங்களில் எங்கள் வீடு தெருவோரம் இருந்ததை எண்ணி வருந்தியதற்குக் காரணம் அந்த துத்தித்தி கிழவிதான். ஏனெனில் சந்திற்குள் வசிக்கும் நண்பர்களுக்கு அவளது குரலின் வீரியமும், அச்சுறுத்தலும் தெரியாது.ஆனால் எனது தூக்கத்தைக் கலைப்பது அவளது குரல் தான்.நான்கு வீடு தள்ளி அவளது குரல் கேட்கும்போதே குலைநடுங்கிவிடும். அப்படியே எழுந்து கதவு இடுக்கு வழியாக அவள் எங்கள் வீட்டைக் கடக்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.சிலநேரங்களில் அவள் எங்கள் வீட்டின்முன் நின்று,அவளைச் சுற்றிவளைக்கும் நாய்களை வெறியோடு துரத்துவதும் உண்டு.அதுமாதிரியான சமயங்களில் அவள் காட்டும் வேகம் எனது பயத்தை மிகுதிப்படுத்திவிடும்.
                                     பல நாட்கள் என்னைவிட வயதில் மூத்த பெரிய பையன்கள் கற்களை எடுத்து அவள் மீது எறிவார்கள்.அவள் வலி தாங்கமுடியாமல்,மேலும் கொடூரமான குரலில் கத்தி,அனைவரையும் பார்த்து யாருக்குமே புரியாத மொழியில் ஓலமிடுவாள்.பலரும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிப்பார்கள். அப்போதெல்லாம் அந்த கல்லெறி வீரர்களை பயமில்லாதவர்கள் என எண்ணி பொறாமைப்படுவதுண்டு.நாய்கள் துரத்தும் போதும்,மனிதர்கள் கல்லால் அடிக்கும்போதும் மட்டுமல்லாமல்,அவள் எப்போதும் கூறும் ஒரேவார்த்தை, ”துத்தித்தி...துத்தித்தி” என்பதுதான்.அதனால்தான் அவளுக்கு துத்தித்தி கிழவி என்று பெயர் வந்ததுபோல.தெருவில் இருக்கும் சிறுவர்களை,பெரியவர்கள் மிரட்டுவதாக இருந்தால்கூட துத்தித்திகிழவியிடம் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்று கூறித்தான் பயமுறுத்துவார்கள். இவ்வாறு ஏன் பயப்படுகிறேன்  என்றே தெரியாமல்,என்னை அச்சமுற வைத்த துத்தித்திகிழவி சில நாட்களாக வராமல் போனாள்.அவள் வராத நாட்களில் கதவிடுக்கு வழியே அவள் வருகிறாளா என்று,பள்ளிக்குச் செல்லும்வரை காத்திருந்து பார்ப்பதுண்டு.அந்த நேரத்தில்தான் எனது பயத்தைப்போக்கி, மகிழ்ச்சியுறச்செய்த செய்தி எனது சித்தப்பாவின் வாயிலாக வந்தது.அது துத்தித்தி கிழவி இறந்துவிட்டாள் என்பதுதான்.
                                             அந்த நேரத்தில் என்னை மகிழ்வுறச் செய்த முதல் சாவு அவளின் சாவுதான்.சிலவருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது,அவள் மனநிலை சரியில்லாதவள் என்பதும்,அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்பதும். மனநிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை கல்லால் அடித்ததையும்,அதனை ரசித்தவர்களையும் காணும்போது,அவர்கள் மனிதமனம் படைத்தவர்களா என்றே எண்ணுகிறது மனம்.மனநிலை பிறழ்ந்த ஒருத்தியின் வலியை, வேதனையை கொண்டாடிய சமூகத்தின் வன்முறை என்னையும் பாதிக்கும் என்பதை,வன்முறைமிக்க சமூகத்தால் எப்படி உணரமுடியும். இப்போதும் தெருவில் யாராவது ஒரு கிழவி கையில் பிரம்போடு புலம்பிக்கொண்டு சென்றால்,துத்தித்தி கிழவியே என்னை ஆக்கிரமித்து கண்களில் சிலதுளி விழச்செய்கிறாள். எனது பாட்டி வயதொத்த அந்த மூதாட்டியை அவள் என்று விளிப்பதும்கூட,அவளுடன் தொலைத்துவிட்ட உறவை, நெருக்கமாக்கிக்கொள்ளும் சிறுவழிதான்..