Showing posts with label காதல்தோல்வி. Show all posts
Showing posts with label காதல்தோல்வி. Show all posts

Tuesday, 3 April 2012

அடுத்தவன் டைரி

                  எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதில்(பாடப்புத்தகத்தை தவிர்த்து) ஆர்வம் அதிகம்.அது நாளடைவில் கையில் கிடைக்கும் பேப்பர்களையெல்லாம் படிக்கும் பழக்கமாகிவிட்டது.மளிகைகடையில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில்,வாடிக்கையாளர்கள் இல்லாத சமயங்களில் பொட்டலம் மடிக்க வைத்திருக்கும் காகிதங்களை எல்லாம் படித்த பின்னரே உபயோகப்படுத்தும் அளவிற்கு வந்துவிட்டது.அன்றும் அப்படித்தான், மதியநேரம் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதபோது,கடைக்கு வந்திருந்த பழைய நோட்டு புத்தகங்களை பிரித்து வைத்துக்கொண்டிருந்தேன். அவைகளுடன் சேர்ந்து,சரியாக முப்பத்தைந்து  வருடங்களுக்கு முந்தைய டைரி ஒன்று இருந்தது.அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப்பற்றி அறிய முற்படுவது அநாகரிகம் என்றாலும்,அதில்தானே நமக்கு ஆனந்தம்.மேலும் கிடைத்ததை எல்லாம் படிக்கும் பழக்கம் வேறு.அது மட்டுமல்ல,இந்த கிராமத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னரே ஒருவர் டைரி எழுதியிருக்கிறார் என்றால் மிகுந்த ஆச்சரியமாகத்தான் இருந்தது.சும்மா இருப்பேனா?அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.அதை எழுதியிருந்தவர் ஒரு ஆண்.அவரை எழுதவைத்திருந்தது ஒரு பெண்ணும்,அவள் நினைவுகளும்.
                                          அந்த டைரியின் தொடக்கத்திலேயே எழுதியவருக்கு போதுமான எழுத்தறிவு இல்லை என்பது தெரிந்தது.ஆரம்ப வகுப்பில் குழந்தைகள் எழுதுவது போன்று கோணல்மாணலாக எழுத்துக்கள் இருந்தன. புள்ளிவைக்க வேண்டிய இடங்களில் வைக்காமலும்,துணையெழுத்து போடவேண்டிய இடங்களில் போடாமலும் இருந்தார்.மேலும் குறிலுக்கும், நெடிலுக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதியிருந்ததால் மிகுந்த வேடிக்கையாக இருந்தது.இருந்தாலும் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவாகப் புரிந்தது.ஒரு மனிதனின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதா என்ன?. டைரியில்,அவர் அந்தப்பெண்ணை பார்த்ததில் இருந்து துவங்கியிருந்தது. அவளைப்பார்த்து சிரித்தபோது,அவள் சுற்றிமுற்றி பார்த்து,யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, திருட்டுத்தனமாகச் சிரித்ததை அவருக்குரிய எழுத்தில் அழகாக எழுதியிருந்தார்.கிராமப்பெண்ணின் வெட்கத்தையும்,அவளை வெட்கப்பட வைத்த தன்னையும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.காட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தனக்காகவே ஈடுபாட்டுடன் செய்து, அவள் கொண்டுவரும் பதார்த்தங்களைப்பற்றியும்,அதனை அவளுக்கே தான் ஊட்டி மகிழ்ந்ததையும் எண்ணி பூரிப்படைந்திருந்தார்.இவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடிய டைரியை இனி நீங்களே படியுங்கள்...
                                             “சுப்பையா என்பது என்பெயர்.எல்லாரும் என்னை சுப்பு என்றுதான் அழைப்பார்கள்.நண்பர்கள் மட்டும் கேலியாக சூப்பு என்று கூப்பிடுவார்கள்.ஆனால் என்னைப்பிடித்த அவள் மட்டும் சூப்பரு என்று கூறிமகிழ்வாள்.எனக்கு கொலுசு சத்தம் என்றாலே பிடிக்காது.சல்லிட்டு மாட்டுக்கு சலங்கை போட்டது மாதிரி என்று சலித்துக்கொள்வேன்.ஆனால் இப்போது?அவள் கொலுசுச்சத்தம் கேட்டால்தான் கொஞ்சநஞ்ச தூக்கமே வருகிறது.காட்டில் கடுமையாக வேலைசெய்து கொண்டிருந்தாலும்,அவள் வந்த உடனே, உடலில் களைத்திருக்கும் செல்களெல்லாம் அப்படியே செத்து உதிர்ந்துவிடும்.அப்போதுதான் காட்டில் நுழைந்தவன்போல சுறுசுறுப்ப்பாகி விடுவேன்.அவளுடன் பேசி,பழக ஆரம்பித்ததில் இருந்தே எவ்வளவு நாட்கள் எப்படி ஓடின என்று கணக்குப்பார்க்க முடியவில்லை.
                                                                     எங்கள் ஊரில் சினிமா கொட்டகையில் படம் ஓடுவதில்லை.அதனால் பக்கத்து ஊரான பண்ணைப்புரத்திற்குத்தான் சினிமாவிற்குப்போவோம்.இரவில் பஸ் கிடையாது என்பதால், வரும்போது ரெண்டுமைல் நடந்துதான் வருவோம்.அன்றொருநாள், அவள் தன்குடும்பத்தினருடன் சினிமாவிற்குப் போகிறாள் என்றசேதி தெரிந்தவுடன்,நானும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டேன். இடைவேளையில் யாருக்கும் தெரியாமல் நான்கொடுத்த கடலைஉருண்டை,சோளப்பொரியை ஆசையுடன் வாங்கிக்கொண்டாள். படமும் முடிந்தது.எனக்கு முன்னால் அவள் குடும்பத்தாருடன் நடந்துபோய்க்கொண்டு இருந்தாள்.கடைசியாக நான் சைக்கிளை மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தேன்.திடீரென்று அவள் கால் சறுக்கி,சுளுக்கு பிடித்ததுபோல நொண்டிநொண்டி நடந்தாள்.அந்தநேரம் பார்த்து நான் பெல்லை அடித்தபடியே சைக்கிளில் வந்தேன்.அவள் அம்மா,”தம்பி இவளை வீட்டில் விட்டுவிடு.பாவம் இவளால் நடக்க முடியவில்லை”என்றார்கள்.நானும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சரி என்றேன்.அவள் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபின் கொஞ்சதூரம் போயிருப்போம்.அவள் சைக்கிளை நிறுத்தச் சொன்னாள்.என்ன என்று கேட்டதற்கு அவள்,”சுளுக்கெல்லாம் ஒன்றும் இல்லை.உங்க கூட வரணும்னுதான் சும்மா பொய் சொன்னேன்.இப்படி சைக்கிள் பின்னாடிதான் உட்காரணும்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்”என்றாள்.”அடிப்பாவி இதுக்குத்தான் இந்த நாடகம் போட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே,அவளை முன்னால் உட்காரவைத்து சைக்கிளை நகர்த்தினேன்.அவள் அருகாமை தந்த வெப்பம்,அவள் கூந்தல் மணம்,அவளின் கொஞ்சும் பேச்சு இவையெல்லாம் அவளின்பால் என்னை மேலும் ஈர்த்தன.இருவரும் காதலிப்பதாக,மிக ரகசியமாக இருட்டுக்குள் பேசி மகிழ்ந்தோம்.அந்த தருணத்தில்,என்னைப்போல யாரவது இவ்வுலகில்  மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா என்றால்,அது சந்தேகம் தான்.பின் அவளை வீட்டில் விட்டு,நான் போய் தூங்கினேன்.மறுநாள் காலை நேற்று நடந்ததில் எது கனவு,எது நிஜம் என்று தெரியாத அளவு குழம்பியிருந்தேன்.
                                             அன்றுமாலை,அவள் வீட்டுப்பக்கம் போனேன்.அப்போதே அவளின் அப்பா என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்.சிறிதுநேரம் கழித்து அவரே என்னிடம்,”இனிமேல் இந்தப்பக்கம் வராதே,அவளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கண்ணை மட்டும் எடுத்துவிடுவேன்”என்று கடுமையாகச்சொன்னார்.நாங்கள் நேற்று இரவு பேசியது எப்படியோ இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.இருட்டில்தான் புலன்கள் அதிக விழிப்புடன் இருக்கும் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது.அவளுக்கு சரியான அடிஉதையாம்.ஆனால் அவள் அசராமல் என்னைத்தான் கல்யாணம் செய்வேன் என்று கூறினாளாம்.பக்கத்துவீட்டு பாட்டி சொன்னாள்.நாளை பார்க்கலாம் என்றுஎண்ணி வீட்டிற்கு வந்து, என்ன பண்ணலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்”.
                                         அந்தநேரத்தில் கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவும், அந்தப்பக்கத்தின்மூலையை மடித்துவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தேன்.மனம் முழுவதும் சுப்பையாவின் காதல் நினைவுகளிலேயே உழன்றது.தான் அறிந்த எழுத்தின் வாயிலாக,தனது வாழ்வில் நடந்ததை உணர்ச்சிபூர்வமாக கூறும் அவரது காதலை எண்ணி மெச்சிக்கொண்டேன்.மிச்சத்தை இரவு படிக்கலாம் என்று இருந்துவிட்டேன்.இரவு எப்போதுவரும் எனக்காத்திருந்து, எல்லாப்பொருட்களையும் கடைக்குள் எடுத்து வைத்துவிட்டு, டைரியைப் புரட்டினேன்.அதில்....
                                             ” விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்.ஒருநிமிடம் இதயம் தனது வேலையை மறந்துவிட்டது.எழுந்து நின்றால் உடலில் எலும்புகளே இல்லை என்னும் அளவிற்கு தளர்ந்துவிட்டது.அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.கண்களில் தரைதாரையாகக் கண்ணீர்.எண்ணம் அவளைப்பார்க்க வேண்டும் என்றது. அவள் தீவைத்துக்கொண்டபின் சுய உணர்வோடுதான் இருந்திருக்கிறாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்.அவளைப்பார்க்க சைக்கிளை எடுத்து மிதித்தேன்.அடுத்த நிமிடம் அவள் முன்னால் இருந்தேன். அவள் சொந்தக்காரர்கள் எல்லாம் ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அவளோ கூந்தல் மணம் இழந்து,கொஞ்சும் பேச்சு இழந்து,கொல்லும் சிரிப்பு இழந்து கரிக்கட்டையாக கிடந்தாள்.தீயை தீ எரிக்க முடியாது என்பதால்,அவள் கண்கள் மட்டும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. அவள் என்னிடம், ”உன்னைக்கல்யாணம் பண்ணினால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் செத்துவிடுவோம் என்று சொன்னார்கள்.அவர்களுக்கு சாதிதான் முக்கியமாம்.எனக்கு நீதான் முக்கியம்.நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்.அதான் இப்படி செஞ்சேன்”என்றாள்.எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது பிறப்பைக்குறித்த குறையை எப்படி தீர்த்துக்கொள்வது? யாராவது விளக்கம் கூறமுடியுமா? என்று உரக்கக் கத்திவிட்டு வீட்டிற்கு வந்தேன்.இரவும் பகலும் எப்போது வந்தது?எப்போது போனது?என்றே தெரியவில்லை.இரண்டு நாட்களாகி விட்டன.அவள் இறந்து விட்டாளாம்.நான் மட்டும் என்ன வாழ்ந்து கொண்டா இருக்கிறேன்.இதுவரை நான் கேள்விப்பட்டிருந்த,நடைபிணம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே நான் மாறிவிட்டேன்.இனிமேல் எந்த ஆதாரத்தோடு இந்த பூமியில் வாழ்வது?”
                                       இத்துடன் அந்த டைரி முடிவடைந்திருந்தது.மனதில் ஏக கனம்.அடுத்தவர் டைரியை ஏன் படிக்கக்கூடாது என்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது.சுகங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கின்ற நாம் துக்கங்களை மறுத்து விடுகிறோம்.அதனால்தான் நாம் நாமாகவே இருக்க முடிவதில்லை.யாரைச் சந்திக்கிறோமோ,அவர்களின் மனநிலைக்கே, அவர்களாகவே மாறிவிடுகிறோம்.அந்தநிலைதான் எனக்கும்.சுப்பையாவின் எண்ண ஓட்டத்தில் நானும் கலந்து விட்டேன்.தூக்கம் வராத இரவு வாழ்வின் இறுதிநாள்வரை காத்திருந்தது போலாகி விட்டது.விடிந்ததும் முதல் வேலையாக டைரியை எடுத்துக்கொண்டு,சுப்பையாவின் முகவரிக்குச் சென்றேன். “இந்த வீட்டில் சுப்பையா என்று யாராவது இருக்கிறர்களா?” என்றேன்.ஒரு பெண்,”இல்லீங்க,எங்களுக்கு முன்னாடி யாராவது இருந்திருக்கலாம்.எனக்குத் தெரியாது”என்றாள்.புதுப்பெண் போல தெரிந்தாள். யாரிடம் கேட்கலாம் என்று எண்ணியபோது,நான்குவீடு தள்ளி இருக்கும் மேரிப்பாட்டி தென்பட்டார்.அவரிடம்,”முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் இந்தத்தெருவில் இருந்த சுப்பையா எங்கே?”என்றேன்.அப்போதுதான் அந்தப்பாட்டி,”ஆமாம்ப்பா இருந்தான்.அவன் காதலிச்ச பொண்ணு தீ வச்சுக்கிட்டு செத்துப்போயிட்டா.அந்த பொண்ணு செத்த நாலுநாளிலேயே அவனும் செத்துப்போயிட்டான்”என்று சொன்னார்.என் கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது.அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை.

குறிப்பு:இந்த சம்பவம் தேனி மாவட்டம்,தேவாரத்தில் நடந்தது.